ஆந்திரப் பிரதேசத்தின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள ஜகைய்யபேட்டை பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடந்த பயங்கர விபத்தில், முதியவர் ஒருவர் ஆந்திரப் பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழக (APSRTC) பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த மரண விபத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முதியவர் சாலையில் நடந்து செல்லும்போது, பேருந்து மோதிய தருணத்தை வீடியோ தெளிவாகக் காட்டுகிறது.
வீடியோவில், முதியவர் சாலையோரமாக எவ்வித ஆபத்தையும் உணராமல் நடந்து செல்கிறார். பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியை அவர் அடையும்போது, பின்னால் வந்த APSRTC பேருந்து, நிலையத்திற்குள் நுழைய திரும்பும்போது அவரை மோதுகிறது.
மோதப்பட்ட முதியவர் தரையில் விழுந்து, பேருந்தின் பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்குகிறார். விபத்து நடந்த உடனே பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியே வந்து பாதிக்கப்பட்டவரைப் பார்க்கின்றனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.