தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் எங்கே பேசுகிறார்? அனுமதி வழங்கிய காவல் துறை..
TV9 Tamil News September 10, 2025 09:48 PM

திருச்சி, செப்டம்பர் 10, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், அந்தக் கட்சி தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2025 ஆகஸ்ட் மாதம் மிகவும் பிரம்மாண்டமாக மதுரையில் இரண்டாவது மாநாடு நடத்தப்பட்டது.

இதுபோன்ற சூழலில், தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் தலைவர் விஜய், “அரசியல் எதிரி பாஜக, கொள்கை எதிரி திமுக” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அதிமுக, திமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், முதலமைச்சர் வேட்பாளராக தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் களமிறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் வேட்பாளரை மாற்றினால் நாங்கள் ஆதரவு தர தயார்.. எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் டிடிவி தினகரன்..

செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் விஜயின் பரப்புரை:

இந்நிலையில், வரவிருக்கும் செப்டம்பர் 13, 2025 முதல் தமிழக முழுவதும் மாவட்டம் தோறும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். டிசம்பர் 20, 2025 வரை சனிக்கிழமைகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார். முதலில் தனது பிரச்சாரப் பயணத்தை அவர் திருச்சியில் இருந்து தொடங்குகிறார். திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் ரவுண்டானா, தலைமை அஞ்சலக அலுவலகம், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே அவர் உரையாற்றுவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் அதிகம் கூடும் காரணத்தினால், சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். வேறு ஏதேனும் இடத்தைத் தேர்வு செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்க: அமித்ஷாவுடன் சந்திப்பு.. நடந்ததை வெளிப்படையாக சொன்ன செங்கோட்டையன்!

காந்தி மார்க்கெட்டில் விஜய் உரை:

இந்த சூழலில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையினரும் அனுமதி வழங்கியுள்ளனர். செப்டம்பர் 13, 2025 அன்று, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி மட்டுமின்றி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.