"மக்களாட்சி மாண்பை காலில் போட்டு மிதிக்கும் கொடுங்கோன்மை”- சீமான் காட்டம்
Top Tamil News September 13, 2025 02:48 PM

கனிம அகழ்வுத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளிக்கும் ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணு தொடர்பான கனிமங்களான அரிய மண் தனிமங்கள் (REEs), யுரேனியம் மற்றும் தோரியம் போன்றவற்றின் அகழ்வுத் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கை, 2006இன் கீழ் உள்ள பொதுமக்கள் கருத்துக்கேட்புத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கும் வகையிலான ஆணையை ஒன்றிய அமைச்சகம் கடந்த 08.09.2025 அன்று வெளியிட்டுள்ளது. முதன்மையான மக்களாட்சி வழிமுறையை நீக்குவதன் வழியே, இந்த ஆணை சுற்றுச்சூழல் சீரழிவை அதிகப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை ஒடுக்குவதற்கும், சுற்றுச்சூழல் சட்டங்களை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்கும் வழிவகை செய்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கை, 2006, பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்குக் கருத்துக்கேட்பினைக் கட்டாயப்படுத்துகிறது. இது திட்ட ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் அரசின் பொறுப்புகளை உறுதி செய்கிறது.  இது பெரும்பாலும் சுற்றுச்சூழல் அபாயகரமான திட்டங்களில் மாற்றங்களை செய்ய அல்லது நிராகரிக்க வழிவகுக்கிறது. இந்த அகழ்வுத் திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணை,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிக்கையை செயலற்றதாக்குகிறது. 

2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் சட்ட திருத்தம் முன்மொழியப்பட்ட போது நாடுதழுவிய எதிர்ப்புக்குரல்கள் வந்தது. நாம் தமிழர் கட்சியும் அந்த வரைவுக்கு எதிரான மாநிலம் முழுமைக்குமான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, ஒன்றிய அமைச்சகத்திடம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் கருத்துப்பதிவுகளை செய்தது. அந்த சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆணைகளின் வழியே மறைமுகமாக மீண்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஒன்றிய பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது. இந்த ஆணை திட்டங்களுக்கான வன அனுமதிகளை எளிதாக்குகிறது, மேலும் காடழிப்பு மற்றும் வாழ்விட இழப்புக்கு எதிரானப் பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துகிறது. இது போன்ற படிப்படியான நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மக்களின் ஆலோசனையின்றி நேரடி ஆணையாக வெளியிடப்படுகின்றன.  

அரிய மண் தனிமங்களைப் (REEs) பிரித்தெடுக்கும் செயல்முறைகள் அதிக அளவில் நச்சுக் கழிவுகளை உருவாக்குகின்றன. இதில் கதிரியக்க பொருட்கள், கன உலோகங்கள் மற்றும் அமிலங்கள் அடங்கும். இது பரவலான மண் மற்றும் நீர் மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. இது நிலத்தை வளமற்றதாகவும், நீர்நிலைகளை நச்சுத்தன்மையுடையதாகவும் மாற்றுகிறது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் யுரேனியம் சுரங்கங்களில், ஜாடுகுடா போன்ற இடங்களில், கட்டுப்படுத்தப்படாத வெளிப்பாட்டின் காரணமாக, பொதுமக்களிடையே அதிகரித்த புற்றுநோய் விகிதங்கள், பிறப்பு குறைபாடுகள் மற்றும் தோல் நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. இவற்றால் பாதிக்கப்படுபவர்கள், பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களின் குரல்களையும் நசுக்குகின்ற வேலையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.

இது சார் தாம் நெடுஞ்சாலைகள் மற்றும் கிரேட் நிகோபார் போன்ற திட்டங்களுக்கான விதிவிலக்குகளைப் போன்றது. அங்கு "தேசியப் பாதுகாப்பு" என்பது சூழலியல் பாதுகாப்புகளைத் தவிர்ப்பதற்கு நியாயப்படுத்தப்பட்டது. இது நிலச்சரிவுகள், காடழிப்பு மற்றும் அழிந்துவரும் இனங்களுக்கு அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்தது. மக்கள் எதிர்ப்பை அமைதிப்படுத்துவதன் மூலமும், தொழில்துறை நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும், அவர்களின் தனிநபர் நலனுக்கான வகையில் ஒன்றிய பாஜக அரசு இவ்வழிவகை செய்திருப்பது மக்களாட்சி மாண்பை காலில் போட்டு மிதிக்கும் கொடுங்கோன்மையாகும்.

தொடர்ச்சியாக சூழலியல் விதிகளை சீரழித்துக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திட்ட அனுமதிகளை வழங்கி, இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் போக்கினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தற்போது வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையினைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.