மதுரை: போன் செய்து வரச் சொன்ன கணவர் கொலை; பார்க்கச் சென்ற இடத்தில் அதிர்ந்த மனைவி!
Vikatan September 14, 2025 10:48 AM

மதுரை பார்க் டவுன் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், முனிச்சாலைப் பகுதியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும் சந்தீப் என்ற மகனும் உள்ளனர்.

ராஜ்குமார் நேற்று இரவு தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு டூவீலரில் வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது மனைவி சந்திரகலாவிற்கு போன் செய்து, 'கடைக்கு செல்ல வேண்டும், பிரதான சாலைக்கு வா' என்று கூறியுள்ளார்.

MURDER

சந்திரகலா வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு செல்ல வெளியில் வந்துள்ளார். அப்போது தெருவிளக்குகள் எரியாமல் வீட்டின் அருகிலயே கணவரின் டூவிலர் நிற்பதை கண்டு அருகில் சென்றுபார்த்தபோது ராஜ்குமார் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சந்திரகலா தனது உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

கூடல்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மர்ம நபர்கள் சிலர் ராஜ்குமாரை வாளால் சரமாரியாக வெட்டியதோடு நெஞ்சில் குத்தி கொலை செய்துவிட்டு வாளை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் தெருவிளக்குகள் எரியாத நிலையில் சிசிடிவி காட்சிகளும் தெளிவாக பதிவாகவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். என்ன காரணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்று பல கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் மதுரை கூடல் நகர்ப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.