சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29, 30 உள்ளிட்ட தேதிகளில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி மாலை பரமக்குடிக்கு செல்லும் முதலமைச்சர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடத்துகிறார்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் அங்கும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்த பின்னர் இரவு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் 30-ந் தேதி காலை ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதிலும் குறிப்பாக ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளார். முதலமைச்சரின் இந்த திட்ட பயணத்தையொட்டி ராமநாதபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.