திருச்சி மாவட்டம் மணப்பாறையில், சொத்து தகராறு காரணமாக அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பழனியாண்டி என்பவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மட்டபாறைபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன். இவரது தம்பி பழனியாண்டி. இவர்கள் இருவரது குடும்பத்திற்கிடையே பூர்வீக சொத்து தொடர்பாக மோதல் நிலவி வந்திருக்கிறது. மேலும் சொத்து பிரிப்பதில் அண்ணன் மற்றும் தம்பி இடையே கடுமையான பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பூர்வீக சொத்து குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது அரசன் மற்றும் பழனியாண்டி ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பழனியாண்டி தனது அண்ணன் அரசனை கடுமையாக தாக்கியிருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அரசனை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அரசன் சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து பழனியாண்டியை கைது செய்துள்ள காவல் துறை இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சொத்து தகராறில் அண்ணனை, தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மது போதையில் தகராறு... 70 வயது முதியவர் அடித்துக் கொலை.!!