நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பரபரப்பு மிகுந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது த.வெ.க. தொண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தினர்.
ஒரு பெண்ணின் 4 சவரன் தங்கச் செயினை அவர் பறித்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, ஆத்திரமடைந்த தொண்டர்கள் அவரை அடித்து உதைத்ததில், அந்த வாலிபர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்திற்கு தன் மகளுடன் வந்திருந்த ஒரு பெண், வடமாநில நபர்கள் தனது நகையை உற்று நோக்கியதாக உணர்ந்து, அச்சத்தில் தன் செயினை கழற்றி மகளிடம் கொடுத்து பையில் வைக்கச் சொன்னார்.
ஆனால், அந்த பையில் இருந்து நகை மாயமானதாகவும், அந்த வாலிபர் அதை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தாக்கப்பட்டவரிடம் நகை கிடைக்கவில்லை.
அவர் வேறு ஒருவரிடம் நகையை ஒப்படைத்துவிட்டதாக அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்தார். போலீசிடம் புகார் அளித்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.