குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க சீனா தொடர்ந்து பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் அதேபோன்ற சலுகைகளை தைவானும் அறிவிக்கத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் சீனாவில் மக்கள் தொகை கட்டுக்குள் வந்திருந்தாலும், எதிர்காலத்தில் இளைஞர்கள் எண்ணிக்கையை விட முதியவர்கள் அதிகரித்து விடுவார்கள் என தெரிய வந்தது.
அதை தொடர்ந்து மக்கள் காதலிக்கவும், குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ளவும் சீனா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தைவானும் களமிறங்கியுள்ளது. தைவான் தன்னை தனிநாடாக கூறி வந்தாலும், சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாகவே தைவானை கருதி வருவதால் இரு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. ஆனால் தைவானின் மக்கள் தொகையும், நிலப்பரப்பும் சீனாவை விட மிகவும் குறைவு.
எனவே எதிர்காலத்தில் இளைஞர்களை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு தைவானில் ஒரு குழந்தை பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், இரண்டு குழந்தைகள் பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகையை 1 குழந்தைக்கு ரூ.3 லட்சம், இரண்டு குழந்தைக்கு ரூ.6 லட்சம் என தைவான் உயர்த்தி அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K