மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேல் குத்தவக்கரையைச் சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் லட்சுமணன் இவரது மனைவி அஞ்சலி. இந்தத் தம்பதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதேபோன்று கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற ராமச்சந்திரன். இவருக்கு சசிகலா, சத்யா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜாவும், லட்சுமணனும் உறவினர்கள். தனது தந்தையின் வீட்டிற்கு அருகே ராஜா வசித்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வர். அப்போது ராஜாவின் இரு மனைவிகளுடனும் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ராஜாவின் இரு மனைவிகளுடன் லட்சுமணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த ராஜா, லட்சுமணனிடம் தனது மனைவிகளுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை வெளியே சொல்லாமல் இருக்க, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பணம் தராவிட்டால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிடுவதாகவும் லட்சுமணனை ராஜா மிரட்டியதாகத் தெரிகிறது. ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து லட்சுமணன், சென்னை ஆவடி பகுதியில் தலைமறைவாக வசித்து வந்துள்ளார். ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணனை பல மாதங்களாகத் தேடி வந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணனின் மனைவி அஞ்சலியைச் சந்தித்து, “உனது கணவர் இருக்கும் இடம் எங்கே?” என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை கொள்ளிடம் அருகே வாய்க்காலில் லட்சுமணன் பிணமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. ராஜா மற்றும் அவரது நண்பர் வல்லம்படுகையைச் சேர்ந்த ராகுல் உள்பட 4 பேர் கொண்ட கும்பல், லட்சுமணன் சென்னை ஆவடியில் இருப்பதைத் தெரிந்துகொண்டு அங்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், லட்சுமணனை கொள்ளிடத்திற்குக் கடத்திவந்துள்ளனர்.
பின்னர் அவரை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை அருகில் உள்ள வாய்க்காலில் வீசிச் சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜா மற்றும் அவரது நண்பர் ராகுல் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.