ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடி தென்றல் நகரைச் சேர்ந்த தாமரைசெல்வி (56) என்ற பெண், வீட்டருகே உள்ள முருங்கை மரத்தில் காய்த்து இருந்த முருங்கைக்காய்களை இரும்புக் கம்பியால் தட்டி எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது காலில் இருந்த செருப்பு இடறி, சமநிலை இழந்து கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில், அவர் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பியைத் தொட்டதால், தாமரைசெல்வி மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.