கடைசி உலகப்போர் ஓராண்டு நிறைவு! -அடுத்த பிளாஸ்டர் அப்டேட் கொடுக்கத் தயாராகும் ஹிப் ஹாப் ஆதி...!
Seithipunal Tamil September 23, 2025 06:48 PM

தனியிசை உலகில் ராப் பாடகராக அறிமுகமான 'ஹிப் ஹாப் ஆதி', இன்று திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தனக்கென தனி அடையாளம் உருவாக்கியுள்ளார்.

அவரின் பாடல்கள் இளைஞர்களிடையே எப்போதும் பரபரப்பை கிளப்புபவையாகவே இருக்கின்றன. அதிலும் தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் திகழ்ந்தார்.

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெளிவந்த அவரது 'டக்கர்' பாடல், இளைஞர்களின் போராட்ட குரலாக மாறியது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான கடைசி உலகப்போர் திரைப்படத்தில், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளராகவும் பல பொறுப்புகளை ஏற்று களமிறங்கினார்.

போரின் பின்னணியில் உருவான இந்த படத்தில் நாசர்,ஹரிஷ் உத்தமன், தலைவாசல் விஜய்,முனிஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி, அனகா, அழகன் பெருமாள்,  இளங்கோ குமரவேல், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்தக் காலத்தை நினைவுகூரும் படப்பிடிப்பு புகைப்படங்களை ஹிப் ஹாப் ஆதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், “சில நேரங்களில் சாத்தியமற்றது என்று நினைக்கும் விஷயம், நம்மை ஒரு படி தூரத்தில் தான் காத்திருக்கும். ‘கடைசி உலகப்போர்’ எனக்கு என்றும் சிறப்பான அனுபவங்களைத் தந்த படமாக இருக்கும்.

தற்போது மிகவும் உற்சாகமான ஒரு முயற்சிக்காக தயார் செய்து வருகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.