இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை ‘பார்க்கிங்’ படம் வென்றது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். இந்ந்நிலையில், ‘பார்க்கிங்’ படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் , இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தேசிய விருதுகளை பெற்றனர்.
வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்த பிறகு, தற்போது தனது முதல் தேசிய விருதை அவர் பெற்றுள்ளார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்தவாறு மேடையில் தோன்றி தேசிய விருதை பெற்றுக்கொண்டார். தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ் - சம்யுக்தா நடித்திருந்தனர்.
ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை கொடுத்துள்ளது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மழையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். உள்ளொழுக்கு படம் கடந்த அண்டு ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மழையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார். ஊர்வசி ஏற்கனவே அசுவிண்டே அம்மா என்ற படத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.