ரங்கராஜ் விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால், ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் செப்டம்பர் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது. நிறுவனத்தின் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட விவகாரத்துக்காக நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில் கம்பெனி பற்றி தேடினால், மெனு கார்டுக்கு பதில், கிரிசில்டாவின் வீடியோ தான் வருகிறது அனைத்தும் பணத்துக்காகவே என வாதிட்டார். மேலும், ஏற்கனவே நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் சமூக வலைதளங்கள் இருவர் பற்றி செய்தி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேட்டரிங் தொழில், திருமணம் சம்பந்தப்பட்டது என்பதால், கிரிசில்டாவின் வீடியோக்களை பார்க்கும் போது எப்படி ஆர்டர் கொடுப்பார்கள். சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
கிரிசில்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர், எப்போது ரத்து செய்யப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது என எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை என வாதிட்டார். திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த மூன்று நாட்களில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குக்கு வணிக வண்ணம் கொடுக்க முயற்சிக்கின்றனர் என வாதிட்டார்.
ஓராண்டுக்கு முன்பே மிசஸ் ரங்கராஜ் என புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும், கிரிசில்டா கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். மோசடிக்குள்ளான கிரிசில்டா, நீதி கேட்டு குரல் கொடுத்திருக்கிறார். கருவில் வளரும் குழந்தைக்காக ஓடிக்கொண்டிருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு மற்றவர்களுடனும் தொடர்பு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. ரவி மோகன் வழக்கு தீர்ப்பு இந்த வழக்குக்கு பொருந்தாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இதனிடையே திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில் செப்.26ஆம் தேதி ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜூக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.