திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த இவர், சமீபத்தில் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். இவருக்கு கிரேசிகா (வயது 9) என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும் உள்ளனர். கிரேசிகா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று, புதிய ஆட்டோவை குழந்தைகளுக்கு காட்டி சுற்றிப் பார்க்கச் செல்லும் போது ஒரு துயரச் சம்பவம் நடந்தது. அதாவது ராஜ்குமார், மகள் கிரேசிகாவையும் மகன் லிதன் ராமையும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் வெள்ளகுளம் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆட்டோவின் கட்டுப்பாடு இழந்து, ஆட்டோ கவிழ்ந்தது.
இந்த விபத்தில், கிரேசிகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமாரும், அவரது மகன் லிதன் ராமும் லேசான காயங்களுடன் தப்பினர். மகள் தனது கண்முன்னே உயிரிழந்ததை பார்த்த ராஜ்குமார் கண்ணீர் மல்கக் கதறி அழுத காட்சி பார்ப்போரையும் உருக்கி விட்டது. தகவல் அறிந்தபோலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கிரேசிகாவின் உடல் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த விபத்தைச் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.