விஜயை பயமுறுத்தில் கூட்டணியில் சேர்க்க பாஜக திட்டம்..அதுக்குத்தான் 'டெல்லியின்' டீமாக செயல்படும் சிபிஐக்கு வழக்கு மாற்றம்! கரூர் எம்பி ஜோதிமணி பரபரப்பு!
Seithipunal Tamil October 17, 2025 04:48 AM

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இப்போது அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விசாரணையை பாஜக அரசியல் நோக்கில் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தமிழக அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டது.

ஆனால் பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றி, அதனை கண்காணிக்க ஒரு சிறப்பு குழுவையும் நியமித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும், இரு அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது –“கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சிபிஐ இதுவரை விசாரித்த எந்த வழக்கிலும் நியாயம் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை,” எனக் குறிப்பிட்டார்.

அவரது கூற்றில் மேலும்,“சிபிஐ விசாரணையை வைத்து விஜயையும் அவரது வெற்றிக் கழகத்தையும் பாஜக அரசியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை பாஜகவின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. சிபிஐ பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை (ED) ஆகியவை இன்று பாஜகவின் அரசியல் கருவிகளாக மாறிவிட்டன,”
என அவர் கூறினார்.

மேலும்,“சிபிஐ விசாரணைக்கு கண்காணிப்பு குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் சேர்க்கப்பட வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்கவில்லை என்பதால் விசாரணை நீளும் அபாயம் உள்ளது,”
எனவும் ஜோதிமணி தெரிவித்தார்.

அவரது இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. விஜயின் வெற்றிக் கழகம் தற்போது எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் “சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக அரசியல் செய்யும் தளம் அமைக்கப்பட்டுவிட்டது” எனக் குற்றம் சாட்டி வருகின்றன.

இதனால் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு, சட்ட ரீதியிலிருந்து அரசியல் ரீதியாக மாறி, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.