கடந்த செப்டம்பர் 25-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரையில் 15 நாட்களில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 51 ஆயிரத்து 557 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 86 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவைகளை நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் மின்சார ரெயிலில் , பண்டிகை காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் நேரங்களில் ஏராளமானோர் ரெயில்களில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபடுவது அவ்வவ்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அப்படி பயணம் செய்யும் அவர்கள் மீது ரெயில்வே சட்டம் பிரிவு 138-கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை கோட்டத்தில் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி முதல் கூடுதல் டிக்கெட் பரிசோதகர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி, கடந்த செப்டம்பர் 25-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரையில் 15 நாட்களில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 51 ஆயிரத்து 557 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 86 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘ஆயுதபூஜை விடுமுறையின்போது டிக்கெட் இல்லாமல் பயணித்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்துள்ளனர். அதில் மின்சார ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களே அதிகம் உள்ளனர்' என்று தெரிவித்தனர்.