திருநெல்வேலியில் சப் கலெக்டராக நடித்து 10 சவரன் நகை மோசடி செய்த தில்லாலங்கடி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், காரியாகுளம் பகுதியைச் சேர்ந்த மகிழ்வதனா என்பவரிடம், நக்கனேரி பகுதியைச் சேர்ந்த சத்தியாதேவி என்ற பெண், தன்னை சப் கலெக்டராக அறிமுகப்படுத்தி, அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டி 100 சவரன் நகை அவசியம் என்று கூறியுள்ளார்.
ஒப்பந்தம் கிடைத்த பிறகு அதிக லாபம் தருவதாக கூறி, மகிழ்வதனாவின் கணவரிடமிருந்து 10 சவரன் நகையை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு மகிழ்வதனா திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் மகிழ்வதனா, அந்த பெண்ணிடம் நகை கொடுத்து ஏமாற்றப்பட்ட விபரம் உண்மை என தெரியவந்தது.
இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடி வந்த நிலையில் சத்தியாதேவியை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் நகை மோசடி செய்து ஏமாற்றி வந்த நபரை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.