நாளை உருவாகிறது புயல் சின்னம்!
Seithipunal Tamil October 21, 2025 06:48 PM

நாளை(அக். 21) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால், அக். 22, 23 ஆம் தேதிகளில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்த அதன் அறிக்கையில், "தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று (அக். 19) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக். 20) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. 

இது, மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெறக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

இதனகாரணமாக வரும் 25 ஆம் தேதிவரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.