தென்காசி வன கோட்டம் கடையநல்லூர் வனச்சரகம், சொக்கம்பட்டி பிரிவுக்கு அருகில் வயது முதிர்ந்த யானையின் நடமாட்டத்தை 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை சொக்கம்பட்டி காவல் நிலையம் பின்புறம் உள்ள தனியார் தோட்டத்திற்கு வந்த யானை, வயது முதிர்வு காரணமாக அங்கு வெகுநேரம் நின்றிருந்தது.
இதனால் அதற்கு சிகிச்சையளிக்க, மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் அவர்களின் உத்தரவின் பேரில், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் வனச்சரக பணியாளர்களுடன் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
யானை சற்று சோர்வுடன் கடந்த சில மாதங்களாக காணப்பட்டு வந்ததால், யானையின் உடல் மற்றும் யானை லத்தி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
கால்நடை மருத்துவர் யானையை ஆராய்ந்ததில், செரிமானக் கோளாறு காரணமாக யானை காட்டை விட்டு வெளியே வந்ததாக தெரிவித்தார். யானையின் உணவு செரிமானம் இன்றி காணப்பட்டது. அதனை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். பின்னர் யானைக்கு தேவையான மருந்துகள் ராகிகளி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
யானையை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையானபோது மருந்துகள் வழங்கவும் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தென்காசி வனச்சரக வனத்துறையினர் யானையை காட்டிற்குள் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மீண்டும் யானை காட்டை விட்டு வெளியே வராதவாறு, கடையநல்லூர் வனச்சரக பணியாளர்கள் இரவு கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை.
விவசாயிகள், வன உயிரினங்களை பார்த்தால் உடனடியாக கடையநல்லூர் வனச்சரக அலுவலருக்கு 9788578344 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், யானை போன்ற வன விலங்குகளை கண்டால், பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவோ அல்லது அதனைத் துன்புறுத்தவோ செய்யக்கூடாது என வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை: மயக்க ஊசி கும்கிகள் - போராடி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை!