கனமழை எதிரொலி – தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
TV9 Tamil News October 23, 2025 03:48 AM

தமிழ்நாட்டில்வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இது புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. இந்த நிைலயில் கனமழை எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 22, 2025 அன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 23, 2025 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் அக்டோபர் 23, 2025 அன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சதிஷ் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 15, 2025 சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : நகர்ந்த மேகங்கள்.. இடைவிடாமல் மழை பெய்யும்.. வானிலை அப்டேட் இதோ!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வலுப்பெறாது என்றும் புயல் உருவாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தமிழ்நாட்டில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் மக்கள் யாரும் ஆறுகள் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க :பொளந்து கட்டும் பருவமழை.. சென்னையில் 12 பேரிடர் மீட்பு படைகள் தயார்!

முன்னதாக கனமழை எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 22, 2025 அன்று வேலூரில் பள்ளிகளுக்கு மாலை 3 மணியுடன் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.