நாம் சந்திக்கும் கடுமையான அவமானம் அல்லது நிந்தனை நிகழ்வுகள் பல வருடங்கள் கடந்தும் மனதில் ஆழப் பதிந்து, வலியைத் தருவதைப் பலரும் உணர்ந்திருப்பர். ஆனால், அதே சமயம் உற்சாகமாக அளிக்கப்பட்ட பாராட்டுக்கள் கூடச் சில வாரங்களுக்குள் எளிதில் மங்கி, நினைவில் இருந்து மறைந்துவிடுகின்றன.
இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்த மனநல நிபுணர்கள் ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளனர். இது மனித மூளையின் பாதுகாப்புச் செயல்முறையுடன் (Survival Mechanism) நேரடியாகத் தொடர்புடையது என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது, எதிர்மறை அனுபவங்கள் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக, அத்தகைய அனுபவங்களை மட்டும் ஆழமாக நினைவில் வைத்துக் கொள்வது மூளையின் ஒரு இயற்கையான நடைமுறை ஆகும்.

உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஓர் உத்தியாகவே மூளை செயல்படுகிறது. இதன் மூலம், மீண்டும் அத்தகைய ஒரு மோசமான அல்லது ஆபத்தான நிகழ்வு நேராமல் இருக்க, மூளை தன்னைத் தயார் செய்து கொள்கிறது. எனவே, எதிர்மறை அனுபவங்கள் மூளையில் நீண்ட காலத்திற்கு நீடித்து நிற்கும் ஆழ்ந்த நினைவுகளாகப் பதிகின்றன.
ஆனால், பாராட்டுக்கள் போன்ற நேர்மறை அனுபவங்கள் அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாததால், அவை எளிதில் மறக்கப்பட்டு விடுகின்றன என்றும், இது மூளையின் ஒரு தற்காப்பு முறையாகும் என்றும் மனநல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.