தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற அவரது படங்கள் ரசிகர்களிடையே கல்ட் கிளாசிக் நிலையை பெற்றவை.
இவற்றில், தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ மற்றும் கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டும் ரசிகர்களின் மனதில் இன்று வரை அழியாத இடத்தை பிடித்துள்ளன. இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் சமீபத்திய நேர்காணலில் தானே நேரடியாக இரு படங்களுக்கும் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார்.
அவரின் சொற்களில் –“ஆயிரத்தில் ஒருவன் 2 ஸ்கிரிப்ட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எழுதிக்கொண்டிருக்கிறேன். அதேபோல், புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் 50 சதவீதம் முடிந்துவிட்டது. இரண்டு கதைகளிலும் எனக்கு முழுமையான திருப்தி வரும் வரை எழுதுவேன். கார்த்தி மற்றும் தனுஷ் இருவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிஸியாக இருக்கிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் படம் தொடங்கும்,” என தெரிவித்துள்ளார்.
செல்வராகவனின் இந்தக் கூறுகள் சினிமா ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது. இரு படங்களுமே வெளியான காலத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவை என்பதால், அவற்றின் தொடர்ச்சிக்கு ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
இயக்குநராக மட்டும் அல்லாமல் நடிகராகவும் செல்வராகவன் தன்னுடைய பங்களிப்பை விரிவாக்கி வருகிறார். சமீபத்தில் ஷேன் நிகம் நடித்த ‘பல்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், பாராட்டுகள் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ தான் செல்வராகவன் இயக்கிய கடைசிப் படம். அது 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது அவர் இயக்கத்தில் ‘மெண்டல் மனதில்’ மற்றும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படங்களும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.இதனால், செல்வராகவனின் படைப்புகள் மீண்டும் அதிரடி காட்டப் போகும் நாட்கள் மிக அருகில்தான் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.