விஜயை அதிமுக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சி தோல்வி – எடப்பாடியை விட்டுக் கொடுக்காத விஜய்! அதிமுக தரப்பில் அதிருப்தி அதிகரிப்பு!
Seithipunal Tamil October 30, 2025 11:48 PM

தமிழக அரசியலில் தற்போது மிக முக்கியமான விவாதமாக மாறியுள்ளது நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜயின் அடுத்த அரசியல் முடிவு. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருகிறார்.

அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி போன்ற சில கட்சிகள் மட்டுமே உள்ளன. ஆனால் திமுக வலுவாக களத்தில் இருக்கும் நிலையில், பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதற்காக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வெளிப்படையாக விஜயை “கூட்டணிக்கு வரவேண்டும்” என அழைத்தும், தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் எந்தவித பதிலும் வரவில்லை.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, அதிமுகவினர் விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக பேசியது குறிப்பிடத்தக்கது. “ஒரு தலைவரும் தனது தொண்டன் உயிரிழக்க விரும்ப மாட்டார்” என எடப்பாடி பழனிச்சாமி கூறியதோடு, பல தொலைக்காட்சி விவாதங்களிலும் அதிமுக பேச்சாளர்கள் விஜய்க்கு ஆதரவாகவே பேசினர். இதனால், விஜயின் கட்சியுடன் நெருக்கம் உருவாகும் என அதிமுக வட்டாரங்கள் எதிர்பார்த்தன.

ஆனால், சமீபத்தில் விஜய் எந்தவித கூட்டணிக்கும் தயங்காமல் தனிப்பட்ட பாதையில் செல்ல முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கரூர் சம்பவத்தில் எவ்வளவோ ஆதரவாக பேசிய எடப்பாடிக்கே விஜய் எந்த பதிலும் அளிக்காதது அதிமுக தரப்பில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சார பயணத்தின் போது, “விஜய் எங்கள் கூட்டணியில் வருவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், அதற்குப் பிறகு தமிழக வெற்றி கழகம் “அந்த கூட்டத்தில் எங்கள் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை” என மறுப்பு தெரிவித்தது. இதுவே அதிமுக தரப்பில் சற்றே சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதேவேளை, தேமுதிகவுடனான கூட்டணியும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜனவரியில் நடைபெறவிருக்கும் தேமுதிக மாநாட்டுக்குப் பிறகு தான் கூட்டணி குறித்த தீர்மானம் வெளிவரும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எனவே, அதிமுக கூட்டணியின் எதிர்காலமும், விஜயின் அரசியல் முடிவும் தற்போது தமிழ்நாட்டில் பெரும் ஆர்வத்தை கிளப்பி இருக்கிறது.

அரசியல் வல்லுநர்கள் கருத்துப்படி, விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதால், அதிமுக–பாஜக கூட்டணிக்கு இணைந்தால் “கொள்கை சுதந்திரம்” இழக்கும் அபாயம் உருவாகும் என்பதால் அவர் தன்னிச்சையான பாதையில் பயணிக்க விரும்புகிறார்.

இதனால், கரூர் சம்பவத்தில் ஆதரவாக இருந்தும் விஜய் கூட்டணிக்கு இணைவதற்கான சாத்தியம் குறைந்துள்ளதாகவும், அதிமுக தரப்பில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.