டெல்லியின் பெருமையாக விளங்கும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளம். 1982ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பிரமாண்ட மைதானம், 60,000 பேர் அமரும் வசதியுடன் அன்றைய ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தளமாக அமைந்தது.
சர்வதேச தரத்திலான தடகள வசதிகள், விரிந்த கால்பந்து மைதானம், மேலும் பல விளையாட்டு அமைப்புகளுடன் இது இந்தியாவின் விளையாட்டு இதயமாக திகழ்ந்தது.1984 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் இங்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் நடந்தன. ஆனால் பின்னர், கிரிக்கெட்டிற்கு இந்த மைதானம் பொருத்தமில்லையென தீர்மானிக்கப்பட்டதால், அந்த விளையாட்டு வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டது.

பின்னர், 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் நேரு ஸ்டேடியம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகும், இங்கு உலக பாரா தடகள போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.ஆனால், தற்போது ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
மத்திய விளையாட்டு அமைச்சகம், 102 ஏக்கர் பரப்பளவில் உள்ள நேரு ஸ்டேடியத்தை இடித்து, அதற்குப் பதிலாக உயர்நிலை வசதிகளுடன் கூடிய “விளையாட்டு நகரம்” (Sports City) ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.இந்த நவீன நகரில், தடகளம் முதல் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுகள் வரை அனைத்திற்குமான முன்னேற்ற வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. அதற்கான வடிவமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.