பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக, தெற்கு ரயில்வே ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து 150க்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகளின் தகவலின்படி, இந்த சிறப்பு ரயில் சேவைகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.
பொங்கல் கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக, திருவிழா முடிந்த பின் ஜனவரி 16ஆம் தேதி முதல் மீண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கடந்த தீபாவளி பண்டிகையின்போதும், 150க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு சுமார் 2.50 லட்சம் பயணிகள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva