கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் அமன் காலனியில் தயபா (வயது 25) என்பவர் வசித்து வந்தார். இவருடன் சமீர் என்கிற பி.கே. இனந்தர் (26) என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக கடந்த 4 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.
சமீருக்கும் தயபாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், தயபா தனது சகோதரர் அஸ்லம் பகவானுடன் சேர்ந்து சமீரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலையான சமீர் உடலுடன் விடிய விடிய தயபா அதே வீட்டில் தங்கியிருந்துள்ளார். அடுத்த நாள் காலை, தயபா கோல்கும்பாஸ் போலீஸ் நிலையத்திற்குச் சென்று, தான் காதலனை கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தார்.
இதையடுத்து, போலீசார் தயபாவை கைது செய்ததுடன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் அஸ்லம் பகவானையும் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
கொலையான சமீர் ஒரு ரவுடி என்பதும், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. காதலித்து வந்த தயபாவுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே சமீர் வசித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன் பிரிந்த இவர்கள், 5 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சேர்ந்துள்ளனர். அதன் பிறகு சமீர், தயபாவை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
சமீரின் தொடர் கொடுமை காரணமாக ஆத்திரமடைந்த தயபா, தனது சகோதரரிடம் நிலைமையை கூறி, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, இருவரும் சேர்ந்து சமீரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர், போலீசார் சமீர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோல்கும்பாஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தயபா மற்றும் அவரது சகோதரரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.