வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) விரைவுபடுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் உதவி மையங்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை செயல்படும் என சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ. குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறப்புத் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மையங்களின் நோக்கம்:
வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பது.
வாக்காளர்கள் அல்லது அவர்களது உறவினர்கள், கடந்த 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த விவரங்களைச் சரிபார்த்து உதவிகளை வழங்குவது.
இந்த மையங்கள் குறிப்பிட்ட நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். கணினி மூலம் வாக்காளர் விவரங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, படிவத்தில் பூர்த்தி செய்ய உதவி செய்யப்படும்.
அத்துடன், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (Booth Agents) தினமும் 50 படிவங்களைப் பெற்று வழங்கத் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அந்தப் படிவங்களை அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்கும்போது, கட்சி முகவர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டதற்கான உறுதிமொழியை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.