தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஆண்டு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல் மற்றும் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தி தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 27ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஊதிய உயர்வை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2015ம் ஆண்டு பிஎல்ஓக்களுக்கு ரூ.6 ஆயிரம் ஆண்டு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், இது ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அல்லது வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2025-26ம் நிதியாண்டிலிருந்து வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.