நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கட்சி தலைவராக மாறிவிட்டார். ஆனாலும் இன்னமும் அவர் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. அவ்வப்போது அவரின் பெயரில் அறிக்கை மட்டும் வருகிறது. இரண்டு மாநாடுகளில் கலந்து கொண்டார்.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேசி வந்தார். அப்படி அவர் கருவுக்கு சென்றிருந்தபோது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக 41 பேர் வரை உயிரிழந்த சம்பவம் விஜயையும், தவெக நிர்வாகிகளையும் ஒரு மாத காலம் முடக்கிப்போட்டது. அதன் பின் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார். அதோடு அவர்கள் வங்கி கணக்கில் ஒவ்வொரு நொங்கு கணக்கில் பணமும் செலுத்தப்பட்டது. அதன்பின் தவெக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 2026 தேர்தலில் விஜய் அதிமுக கூட்டணியில் இணையவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் ‘நான் எப்போதே அரசியலுக்கு வந்து விட்டேன். எனது அரசியல் மக்களுக்கான அரசியல். என்னோட போராட்டம் என் பிரச்சாரத்தில் என் கால் தடம் எல்லா தெருக்களிலும் பதியும். விஜய் மாதிரி அப்படியே வானத்தில் சுத்திக்கிட்டு இருக்க மாட்டேன். .விஜய் வானத்திலேயே பறந்துகிட்டு இருக்காரு.. களத்தில் வந்து போராட மாட்டாரு.
‘ரஞ்சிதமே உதடு வலிக்க கொஞ்சணுமே’ என முட்டி வலிக்க டான்ஸ்லாம் ஆடிட்டு அரசியலுக்கு வந்திருக்காரு. அதனால மக்களுக்கு பாடுபட தெருவுல நடந்தா முட்டி வலிக்கும்.. முதலில் அவரை ஆதரிச்சேன். ஆனா அவரும் மத்திய அரசுக்கு சொம்பபடிக்க வந்தவர்தான்’ என பேசியிருக்கிறார்