தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் (Rishabh Pant), அணியின் மோசமான செயல்பாட்டிற்காக மனமுடைந்து ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தொடரில் கில் விலகியதால், கேப்டனாகச் செயல்பட்ட பண்ட், தனிப்பட்ட முறையிலும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அவரது பதிவில், “கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் போதுமான அளவிற்குச் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வெட்கமில்லை. நாங்கள் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் செயல்பட்டு, கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் புன்னகையை அளிக்கவே விரும்புகிறோம்.
இந்த முறை எங்களால் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை, அதற்காக மன்னிக்கவும். விளையாட்டானது தனிநபர்களாகவும், குழுவாகவும் கற்றுக்கொள்ளவும், வளரவும் கற்றுக்கொடுக்கிறது.
இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை. நாங்கள் மீண்டும் வலுவாகவும், சிறப்பாகவும் திரும்பக் கடினமாக உழைப்போம்” என்று ரிஷப் பண்ட் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.