வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 03 வழக்குகளில், அவருக்கு, 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் வெடித்த வன்முறை சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மொஹமட் யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த புதிய அரசு அமைந்தவுடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை ஊழல் செய்தது, உட்பட ஏராளமான வழக்கு பதிவு செய்யப்பட்டன. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக கூறி தொடர்ந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கதேசத்தில் புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மமும், 03 வழக்குகளிலும் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்தார். மேலும் அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா 07 ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவரின் மகன் சஜீப் வாகீத்துக்கும், மகள் சயிமா வாஜீத்துக்கும் தலா 05 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.