மேற்கு வங்க மாநிலத்தில் உயிருடன் இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக நேற்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில், கொல்கத்தா அருகே உள்ள டங்குனி நகராட்சியின் பதினெட்டாவது வார்டு கவுன்சிலரான சூர்யா தே என்பவரின் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அலட்சியத்தைக் கண்டித்த கவுன்சிலர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக ஒரு மயானத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மயானத்தில் இருந்த அதிகாரிகளிடம், “அரசு என்னைக் காகிதத்தில் கொன்றுவிட்டதால், முறைப்படி இப்போது என்னை இங்கேயே தகனம் செய்துவிடுங்கள்” எனக் கூறி அவர் ஆவேசமாகப் பேசினார்.
ஒரு மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என்று சூர்யா தே கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தவறுகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.