உலகின் முதல் பறக்கும் கார் என்று அறியப்படும் ஏலெப் மாடல் ஏ அல்ட்ராலைட் 2 வாகனம் தற்போது வணிக ரீதியிலான உற்பத்திக்குத் தயாராகியுள்ளது. நான்கு சக்கரங்களுடன் சாதாரண காரைப் போலச் சாலைகளில் ஓடும் அதே வேளையில், இறக்கைகள் ஏதுமின்றி நின்ற இடத்திலிருந்தே செங்குத்தாக விண்ணில் பாயும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால், இது உலகின் முதல் உண்மையான பறக்கும் காராகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஏலெப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வாகனம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இருந்து தப்பித்து வான்வழியே பயணிக்க வழிவகை செய்கிறது. இந்த நவீனப் பறக்கும் காரை ஒருமுறை முழுமையாக மின்னூட்டம் செய்தால், சாலைகளில் 350 கிலோமீட்டர் தொலைவு வரையிலும், வான்வழியே 170 கிலோமீட்டர் தொலைவு வரையிலும் பயணம் செய்ய முடியும்.
தொடக்கக் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலருக்கு மட்டும் இந்த வாகனம் வழங்கப்பட்டு, பல்வேறு கட்டத் தீவிரச் சோதனைகளுக்குப் பின்னரே இது பொதுச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த வாகனம், எதிர்காலப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.