டெல்லி அரசு தனது மதுபானக் கொள்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, மதுபான கையிருப்பை சரிபார்க்கவும், முன்பதிவு செய்யவும் ஒரு புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் விருப்பமான பிராண்டுகள் எவ்வளவு உள்ளன என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
தங்களுக்குத் தேவையான மதுபானங்களை முன்கூட்டியே பதிவு செய்து, கடைகளில் காத்திருக்காமல் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்த பொருட்களை ஒரு மணி நேரத்திற்குள் வாங்க வேண்டும்; இல்லையெனில் அவை மீண்டும் பொது விற்பனைக்கு சென்றுவிடும்.
அமைச்சர் பர்வேஷ் வர்மா தலைமையிலான குழு இந்த வரைவு கொள்கையை உருவாக்கி வருகிறது. இது ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்படும். அமைச்சரவை மற்றும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு இக்கொள்கை நடைமுறைக்கு வரும்.
இப்புதிய டிஜிட்டல் முறை மதுபான விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடுகளை குறைக்கவும், நுகர்வோர் வசதியை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva