வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது... டிச.30 சொர்க்கவாசல் திறப்பு!
Dinamaalai December 20, 2025 09:48 AM

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், 'பூலோக வைகுண்டம்' என்று பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், உலகப் புகழ்பெற்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா இன்று டிசம்பர் 20 சனிக்கிழமை பகல் பத்து உற்சவத்துடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகியது. முன்னதாக, நேற்று டிசம்பர் 19 இரவு மூலஸ்தானத்தில் 'திருநெடுந்தாண்டகம்' நிகழ்வுடன் இந்த 21 நாள் பெருவிழாவிற்கான அனுமதியை அரங்கனிடம் அரையர்கள் பெற்று விழாவைத் தொடங்கி வைத்தனர்.

பகல் பத்து உற்சவம் - திருமொழித் திருநாள்:

இன்று தொடங்கும் 10 நாள் உற்சவம் 'பகல் பத்து' அல்லது 'திருமொழித் திருநாள்' என்று அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் அருளிய 'பெரிய திருமொழி' பாசுரங்களை அரங்கன் முன் அரையர்கள் இசைக்கும் காலமே இதுவாகும். இன்று முதல் திருநாளை முன்னிட்டு, உற்சவர் நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு, பிரகாரங்களை வலம் வந்து 'அர்ஜுன மண்டபத்தில்' எழுந்தருள்வார்.

நம்பெருமாளின் சிறப்பு அலங்காரமும் சேவையும்:

பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளன்று, நம்பெருமாள் மிகவும் விசேஷமான பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் காட்சியளிப்பார். ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபய ஹஸ்தம், நெற்றிப் பூ, முத்துச் சரங்கள் மற்றும் அடுக்கு பதக்கங்கள் போன்ற விலைமதிப்பற்ற திருவாபரணங்களை அணிந்து, அர்ஜுன மண்டபத்தில் அவர் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். காலை முதல் நண்பகல் வரை அரையர்கள் ஆழ்வார் பாசுரங்களை தாளம் மற்றும் அபிநயத்துடன் இசைக்கும் 'அரையர் சேவை' நடைபெறும்.

முத்தங்கி சேவையில் மூலவர் ரங்கநாதர்:

பகல் பத்து உற்சவம் தொடங்கும் நாளிலிருந்து அடுத்த 20 நாட்களுக்கு, மூலவர் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) முழுவதுமே முத்துக்களால் இழைக்கப்பட்ட முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த தரிசனத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவார்கள்.

வைகுண்ட ஏகாதசியின் முக்கியத்துவம்:

இந்த பகல் பத்து உற்சவத்தின் 10-ம் நாளான டிசம்பர் 29 அன்று 'மோகினி அலங்காரம்' நடைபெறும். அதைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு வரும் டிசம்பர் 30, 2025 அன்று அதிகாலை 5 மணியளவில் மிக விமரிசையாக நடைபெறும். இன்று தொடங்கும் இந்தத் தமிழ் மறைத் திருவிழா, ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அரங்கன் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக அமைகிறது. இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.