வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிராக் பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்படிக்கட்டு ஒன்று திடீரென அதிவேகமாக இயங்கிய சம்பவம் மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் வழக்கம்போல மின்படிக்கட்டைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதன் வேகம் பலமடங்கு அதிகரித்தது.
இதனால் அதன் மேல் நின்றிருந்த மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழவிருந்த நிலையில், ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டும் கைப்பிடிகளை இறுக்கப் பற்றிக்கொண்டும் தங்களைக் காத்துக்கொண்டனர். மின்படிக்கட்டு தரையை நெருங்கியதும் மாணவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அதிலிருந்து கீழே குதித்து ஓடும் காட்சிகள் காண்போரை அதிர வைக்கின்றன.
சுமார் 17 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், பல்கலைக்கழகக் கட்டமைப்பு வசதிகளின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பல்கலைக்கழக நிர்வாகம், மின்படிக்கட்டை உடனடியாக மூடிவிட்டு அதன் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி போன்ற நாடுகளில் இது போன்ற மின்படிக்கட்டு விபத்துகள் நடந்திருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வரும் நிலையில், பொது இடங்களில் உள்ள இயந்திரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.