கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவகண்ணன் (27). இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினரைப் போல நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்ஸ்பெக்டரின் மகள்களை கவனிப்பதற்காக உறவினரான இளம்பெண் ஒருவர் அவரது மதுக்கரை பகுதியில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களாக பணிச்சுமை காரணமாக இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு செல்ல முடியாத நிலையில், பாதுகாப்புக்காக தனது டிரைவரான மாதவகண்ணனை வீட்டில் இருக்குமாறு அனுப்பியுள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த இளம்பெண் குளித்துக் கொண்டிருந்த சமயத்தில், மறைவிடத்தில் இருந்து செல்போன் மூலம் மாதவகண்ணன் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக செல்போன் மூலம் இன்ஸ்பெக்டரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துக் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்ததாக கூறப்படும் மாதவகண்ணனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.