பைக்கில் கட்டுக்கட்டாக பணம்.. பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து கடத்தல்.. ஷாக்கான போலீஸ்!
TV9 Tamil News December 24, 2025 08:48 PM

கோவை, டிசம்பர் 24: கோவையில் இரு சக்கர வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து ரூ.56 லட்சம் ஹவாலா பணத்தை கேரளாவிற்கு கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பெட்ரோல் டேங், சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து பணம் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சேலத்தில் தொடங்கி, ஈரோடு, கோவை வழியாக கேரளாவின் கொச்சி வரை செல்லும் மிக முக்கியமான வழித்தடமாகும். தென்னிந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் இந்த நெடுஞ்சாலையில், அவ்வப்போது திருட்டு வழிப்பறி, ஹவாலா பணம் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடத்து வருகிறது. அதற்காக, காவல் துறையினர் தொடர்ச்சியாக சோதனைச்சாவடிகள் அமைத்து குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், நேற்றைய தினம் சோதனையில் ஹவாலா பணம் படிப்பட்டது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: வீடற்றோர்களுக்கு இரவு நேர காப்பகம்.. 15 அத்தியாவசிய பொருட்கள் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

கோவையில் வாகன சோதனையில் சிக்கிய பைக்:

கோவை அடுத்த வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் (டிசம்பர் 23) நேற்று காலை 11 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர், போலீசார் சோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும், யூடர்ன் அடித்து திரும்பி சென்றுள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக திரும்பிச் சென்ற அந்த நபரை சிறிது தூரத்திற்கு துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர்.

ரகசிய அறை அமைத்து கடத்தல்:

அப்போது, சந்தேகத்தின்பேரில் அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். இதில், சீட்டுக்கு அடியிலும், பெட்ரோல் டேங்கிலும் ரகசிய அறை அமைத்து 500 ரூபாய் கட்டுகளாக அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

கட்டுக்கட்டாக ஹவாலா பணம்:

விசாரணையில், கேரள மாநிலம் பெருந்தல்மன்னா, மலப்புரத்தை சேர்ந்த ஷபீக் (38) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் இருக்கையின் கீழ் பகுதி மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.56 லட்சம் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதோடு, இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் , போலீசார் விசாரணையில் அது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..

தங்கநகை வியாபாரியின் மகன்:

மேலும், ஷபீக் மலப்புரத்தை சேர்ந்த தங்கநகை வியாபாரி ஹம்சா என்பவரது மகன் என்பதும், நகைகள் விற்ற பணத்தை முறையாக பில் இல்லாமல் கொண்சடு வந்ததால் சிக்கிக் கொள்வோம் என பயந்து சீட்டுக்கு அடியில் மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தையும், கேரளாவை சேர்ந்த ஷபீக் என்பவரையும் வருமானவரிதுறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.