திமுக ஆட்சியில் ஒவ்வொருவரின் தலையில் ரூ.1.27 லட்சம் கடன்…தமிழிசை செளந்தரராஜன் கொந்தளிப்பு!
TV9 Tamil News December 29, 2025 08:48 PM

இது தொடர்பாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜகவின் அடிமையாகி விட்டதாக கூறிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் தான், திமுகவின் நிரந்தர அடிமையாக மாறிவிட்டார். அதிமுக அவர்கள் கட்சியின் கொள்கையையும், பாஜக அவர்களது கொள்கையையும் பேசி வருகிறது. இதில், தொல். திருமாவளவனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இவ்வளவு பேசும் அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரத்தில் பேசுவதற்கு துணிச்சல் இல்லாமல் போய்விட்டது. இந்த சம்பவம் நடந்தது 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த பகுதி மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்காமல் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமலும், உரிய நியாயம் கிடைக்காமலும் உள்ளது.

ஒவ்வொருவரின் தலையில் ரூ.1.27 லட்சம் கடன்

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் குரல் எழுப்பாமல் உள்ளது. இப்படி இருக்கும் இவர்கள் பாஜக கூட்டணி கட்சியினரை பார்த்து அடிமை என்று கூறுகின்றனர். அதிமுக, பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் திமுக ஆட்சியில் 9.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தமிழரின் தலையிலும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கடன் உள்ளது.

மேலும் படிக்க: தவெகவில் இணையும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் – செங்கோட்டையன் சொன்ன தகவல்

ரூ.67 ஆயிரம் கோடி வட்டி

இதற்கான வட்டி மற்றும் ரூ. 67 ஆயிரம் கோடி கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் தலையிலும் ரூ. 9 ஆயிரம் வட்டி உள்ளது. எனவே, தமிழகத்தில் ரூ. ஆயிரம் உதவித்தொகை அளித்துவிட்டு, ஒரு குடும்பத்தில் 5 லட்சம் ரூபாய் கடனை திமுக அரசு சுமத்தி உள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அணியாக வந்தால் தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார்.

தவெக தலைவர் தனிமைபடுத்தப்பட வாய்ப்பு

தனியாக வந்தால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவார். எனவே, தமிழக மக்களுக்காக முடிவு எடுக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாஜகவுடன் கூட்டணி வைத்து தான் எம் எல் ஏ பதவிக்கு வந்தார். கோவையில் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். தமிழகத்தில் 4 இடங்களில் தாமரை மலர்ந்துள்ளது. மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பதால் பாஜக கூட்டணி வலுவிழந்து உள்ளதாக அர்த்த கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திருப்பூரில் திமுக மகளிரணி மாநாடு.. திரளும் 2 லட்சம் பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.