அடுத்தடுத்து ஹிட் படங்களையே கொடுத்து வரும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எந்த இயக்குனருடன் இணையப் போகிறார்? யார் அந்த படத்தை தயாரிக்கப் போகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியானதில் இருந்து அந்த படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்க முதலில் ரஜினியை வைத்து தான் ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக கமல் அறிவித்திருந்தார்.
அந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகிவிட்டார். அவருக்கு பதிலாக யார் அந்த படத்தை இயக்குவார் என்ற ஒரு கேள்வியும் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ரஜினியும் அஸ்வத் மாரிமுத்துவும் இணைந்து வந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதனால் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்ற ஒரு தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் ரெட் ஜெயண்டுடன் ரஜினி இன்னொரு படத்தில் இணைய போவதாக தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தை ஒரு வேளை எச் வினோத் இயக்குவார் அல்லது வீரதீர சூரன் திரைப்படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எச்.வினோத் தனுஷுடன் ஏற்கனவே அவர் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அதற்கடுத்தபடியாக கார்த்தியை வைத்து ஒரு படத்தை எச். வினோத் இயக்கப் போகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகுதான் அவர் ரஜினியை வைத்து இயக்குவார். அதனால் ரஜினி ரெட் ஜெயண்ட் இணையும் அந்த படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.