கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, தற்கொலைக்கு முயன்ற மகளை காப்பாற்ற சென்ற தந்தை கிணற்றில் மூழ்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் தனலட்சுமி, குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தனது மகள் கிணற்றில் குதிப்பதை கண்ட தந்தை அண்ணாதுரை, பதற்றமடைந்து மகளை காப்பாற்றுவதற்காக உடனடியாக கிணற்றில் குதித்தார். ஆனால், அண்ணாதுரை மதுபோதையில் இருந்ததால், தண்ணீரில் இருந்து மேலே வர முடியாமல் தத்தளித்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனலட்சுமியை மீட்டனர். துரதிர்ஷ்டவசமாக, அண்ணாதுரையை அவர்களால் உயிருடன் மீட்க முடியவில்லை; அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் பிழைத்த நிலையில், அவரை காப்பாற்ற துணிந்த தந்தை மதுபோதையால் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குளித்தலை போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Mahendran