“தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர்தான் புகார்தாரர்”… KVN நிறுவனம் பகீர் குற்றச்சாட்டு… ஜனநாயகன் நாளை ரிலீஸ் ஆகுமா ஆகாதா…?
SeithiSolai Tamil January 08, 2026 01:48 AM

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி கடந்த டிசம்பர் 18-ம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க நிபந்தனை விதித்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டது. தயாரிப்பு தரப்பும் அந்த மாற்றங்களைச் செய்தது.

இந்நிலையில், படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக புகார் வந்ததைக் காரணம் காட்டி, படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு (Review Committee) மாற்றி தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன:

தயாரிப்பு தரப்பு: “500 கோடி ரூபாய் செலவில் உருவான படம் இது. படம் இன்னும் வெளியாகாத நிலையில், அதில் என்ன காட்சிகள் இருக்கிறது என்று தெரியாமல் யாரோ கொடுத்த புகாரின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க மறுப்பது சட்டவிரோதமானது. ஏற்கனவே மண்டல அலுவலர் சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த பிறகு, தணிக்கை வாரியத் தலைவர் அதை மறுஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் இல்லை.”

தணிக்கை வாரியம்: “படம் 500 கோடியாக இருந்தாலும், 1 கோடியாக இருந்தாலும் வாரியத்திற்கு ஒன்றுதான். மத உணர்வு தொடர்பான புகார்கள் வந்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுத் தேதியைக் காரணம் காட்டி தணிக்கை வாரியத்தை யாரும் நிர்பந்திக்க முடியாது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியம் தரப்பில் பெறப்பட்ட புகார் மனுக்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். இதையடுத்து, இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இறுதித் தீர்ப்பை நாளை (ஜனவரி 8) அறிவிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

9-ம் தேதி படம் வெளியாக வேண்டிய நிலையில், நாளைய தீர்ப்பு விஜய் ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே நேரத்தில் தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர் தான் புகார் தாரர் எனவும் அது தங்களுக்கு தற்போது தான் தெரிந்தது எனவும் தயாரிப்பு நிறுவனம் வாதித்ட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.