மஹாராஷ்டிரா நாக்பூரில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் சூரியசக்தி ஆலையில் மீடியம் காலிபர் வெடிமருந்து உற்பத்தி தொகுதியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
இந்தியா வெடிமருந்து துறையில் நீண்ட காலமாக பற்றாக்குறையை உணர்ந்து வந்துள்ளது. வெடிமருந்து பற்றாக்குறை நமது பாதுகாப்பை பாதித்த நாட்கள் தனக்கு நினைவில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நம்மிடம் தளவாடங்களும், உபகரணங்களும் இருந்தன. ஆனால் வெடிமருந்து பற்றாக்குறை இருந்தால், அந்த உபகரணங்களின் பயன்பாடு குறைவாகவே இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நம்மிடம் எவ்வளவு நவீன உபகரணங்கள் இருந்தாலும், வெடிமருந்து பற்றாக்குறை அதன் செயல்திறனை மட்டுப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், அத்தகைய சூழ்நிலை ஒரு வளமான மற்றும் திறமையான தேசத்திற்கு ஏற்றது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று, வெடிமருந்து உற்பத்தியில் நாம் படிப்படியாக சீராக முன்னேறி வருகிறோம். வேகம் மட்டுமின்றி, தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் நாம் முன்னேறுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இது நமது பாதுகாப்புத் தயார்நிலைக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெடிமருந்து உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும் என்றும், இன்று பல வகையான வெடிமருந்துகள் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. வரும் காலங்களில், பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்கு 50 சதவீதத்தை எட்டுவதை உறுதி செய்வோம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.