நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. ஜன. 22ஆம் தேதி கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்..
TV9 Tamil News January 19, 2026 08:48 PM

சென்னை, ஜனவரி 19, 2026: மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு ஜனவரி 21ஆம் தேதி வருகை தருகிறார். இந்த சூழலில், ஜனவரி 22ஆம் தேதி அதிமுக–பாஜக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், மேலும் பிற கட்சிகளுடனும் கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.

தேர்தலை சந்திக்க தயாராகும் பாஜக:

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்ட நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலையும் மீண்டும் ஒன்றாக சந்திக்க உள்ளன. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாஜகவைப் பொருத்தவரையில், தமிழகத்தில் ஆழமாக காலூன்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. ஆனால் இந்த முறை கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு, அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: கரூர் சம்பவம்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் த.வெ.க தலைவர் விஜய்..

அதிமுக கூட்டணியில் 50 இடங்களை கேட்கும் பாஜக?

2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவிடம் பாஜக கிட்டத்தட்ட 50 இடங்களை கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், தேர்தலுக்கான பணிகள் பாஜக தரப்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 21ஆம் தேதி, மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்த பயணத்தின் போது, அவரது தலைமையில் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 ஆம் தேதி நடக்கும் பாஜக பொதுக்கூட்டம்:

முக்கியமாக, ஜனவரி 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இந்தக் கூட்டம் மதுரையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அவருடன் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க: நிறைவடைந்த SIR பணிகள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்..

சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டம் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜனவரி 21ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் பியூஷ் கோயல், இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்தாகும் அதிமுக பாஜக கூட்டணி ஒப்பந்தம்:

இந்த நிலையில், ஜனவரி 22ஆம் தேதி அதிமுக–பாஜக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நாளில், பிற கட்சிகளுடனும் கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22ஆம் தேதி தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒன்றாக மேடையில் பங்கேற்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.