கடந்த சில நாட்களாகவே ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சொல்லி அந்நாட்டின் மீது இந்த தாக்குதலை அந்த இரண்டு நாடுகளும் செய்து வருகிறது. இஸ்ரேல் கடுமையாக தாக்கியதில் அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் பல கட்டிடங்கள் சேதமடைந்திருக்கிறது.
மேலும், இந்த போரில் ஈரானை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத்தளங்கள் அமைந்திருக்கும் சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..
இதன் காரணமாக உலக நாடுகள் கலக்கமடைந்திருக்கின்றன. ஏனெனில், இது மூன்றாவது உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்கிற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம், வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. அந்த போர்க்கப்பலில் 180 கடற்படை வீரர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த கப்பலில் இருந்து 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கப்பல் கடலில் மூழ்கி வருகிறது.