தூக்கத்தில் வாய்வழி மூச்சு: எச்சரிக்கை தரும் அறிகுறியா? பெற்றோர்களே தெரிஞ்சிக்கோங்க.!
Tamilspark Tamil February 14, 2026 03:49 PM

மூச்சுவிடுவது தூக்கத் தரம், மனநலம், கற்றல் திறன் வரை பாதிக்கக்கூடிய பழக்கம் என்பதால் பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

வாய் திறந்தபடி மூச்சு விடுறாங்களா?

குழந்தைகள் தூங்கும்போது மூக்கு வழியாக அல்லாமல் வாய் வழியாக மூச்சு விடுவது இயல்பான பழக்கம் அல்ல என குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை தற்காலிகமாக இருந்தாலும், தொடர்ந்து நிகழ்ந்தால் அது உடல்நலக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். உறக்கத்தின் போது வாய் திறந்தபடியே மூச்சு விடுவது, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: முதல் சிக்னல் கொடுப்பது விரல்களின் நகம்தான்! இப்படியெல்லாம் இருந்தால் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்!

சுவாச தொற்றுகள் கவனம்:

வாய் வழியாக மூச்சு விடுவதால் வாயின் உள்ளே ஈரப்பதம் குறைந்து எச்சில் உலர்கிறது. இதன் விளைவாக பல் சொத்தை, ஈறு பிரச்சனைகள் உள்ளிட்ட வாய்சார் நோய்கள் உருவாகலாம். மேலும், மூக்கு வழி சுவாசம் அளிக்கும் இயற்கையான காற்று சுத்திகரிப்பு இல்லாமல், நேரடியாக காற்று உடலில் செல்லும் போது தொற்று அபாயமும் அதிகரிக்கிறது. இந்தப் பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தால், அடிக்கடி வறண்ட இருமல் மற்றும் சுவாசத் தொந்தரவுகள் ஏற்படலாம்.

அலட்சியப்படுத்த வேண்டாம்:

இந்த நிலையில் தூக்கத்தின் தரமும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆழ்ந்த, தொடர்ச்சியான உறக்கம் கிடைக்காமல் போவதால், காலையில் எழும்போது சோர்வு, எரிச்சல் மற்றும் கவனம் சிதறல் போன்ற பிரச்சனைகள் காணப்படலாம். நாளடைவில் இது குழந்தையின் மனநலத்தையும் நடத்தையையும் பாதிக்கும். சில குழந்தைகளில் அதிக சுறுசுறுப்பு அல்லது மந்தநிலை, கவனக் குறைபாடு போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதனை பெற்றோர் அலட்சியப்படுத்தக் கூடாது.

கவனம் கொள்க:

மருத்துவ ரீதியாக பார்க்கும்போது, மூக்கு அடைப்பு, அலர்ஜி, சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா, அடினாய்டு அல்லது டான்சில்ஸ் பெரிதாகுதல், சுவாசப் பாதை குறுகல் போன்ற காரணங்களால் குழந்தைகள் தூக்கத்தில் வாய் வழியாக மூச்சு விடுகின்றனர். எனவே இது ஒரு பழக்கம் மட்டுமல்ல. உடல்நல சிக்கலை சுட்டிக்காட்டும் அறிகுறி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை தொடர்ந்து கவனத்தில் வந்தால், பெற்றோர் தாமதிக்காமல் குழந்தைகள் நல மருத்துவர் அல்லது காது-மூக்கு-தொண்டை நிபுணரை அணுக வேண்டும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.