“முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” நெல்லை கொலை சம்பவத்தை சுட்டிக் காட்டி விஜய் கேள்வி..
TV9 Tamil News March 03, 2026 04:48 PM

சென்னை, மார்ச் 03: நெல்லையில் போதைக் கும்பல் நடத்திய கொலை வெறித் தாக்குதல் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி பகுதியில் போதை கும்பல் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதும் தெரியவில்லை. நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், தற்போது வரை குற்றத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் நெருங்காதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க: நெல்லையில் பயங்கரம்.. போதை கும்பல் வெறியாட்டம்.. ஓட ஓட அரிவாள் வெட்டு.. இருவர் பலி..

தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான…

— TVK Vijay (@TVKVijayHQ)

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?:

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: பள்ளி மாணவர்களிடேயே ஏற்பட்ட தகராறு… சிறுவனை கொலைசெய்த மர்ம கும்பல்

முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?:

ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் திமுக ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.