தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..
TV9 Tamil News March 03, 2026 11:49 PM

திருச்சி, மார்ச் 2, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி:

தமிழகத்தைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சியான அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக–பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தரப்பின் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த சூழலில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், பாஜக தரப்பில் அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் நான்கு இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை கிட்டத்தட்ட 40 தொகுதிகள் கேட்கப்படுவதாகவும், அதுகுறித்து அதிமுக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிப்பு பின் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை:

இந்த நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பணிகள் உள்ளிட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் உள்ளனர் – முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர், “கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தற்போது வரை தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அது குறித்து பேசப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் என்பது அவருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இடையிலான விஷயம்” எனவும் கூறினார்.

திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி:

தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறியதைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “எந்த துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூறினால் கேட்கலாம். அனைத்து வகைகளிலும் இன்று தமிழ்நாடு தாழ்ந்துவிட்டது. கையில் புத்தகம் வைத்திருக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா வைத்துள்ளனர். இரண்டு வயது குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை உள்ளது.

தேசிய மகளிர் ஆணையம், 50 சதவீத பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு என கூறியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான்.

உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவது மட்டுமே திமுகவின் ஒரே நோக்கம். பணபலமும் அதிகாரபலமும் அனைத்து இடங்களிலும் திமுகவிடம் உள்ளது. ஆனால் அதைவிட மக்கள் பலம் தான் பெரியது என்பதை வரவிருக்கும் 2026 தேர்தலில் நிரூபிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.