திமுக கூட்டணியில் மீண்டும் இணைந்த கைகள்… காங்கிரஸ் கேட்ட 35 தொகுதிகளுக்குப் பதில் 29 இடங்களில் சமரசம்… சூடுபிடிக்கத் தொடக்கும் தேர்தல் களம்…!!!!
SeithiSolai Tamil March 04, 2026 12:48 AM

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமு கழகம் தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளன. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமு கழகம் மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக காங்கிரசுக்கு இருபத்தைந்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்க திமு கழகம் முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் நாற்பது தொகுதிகள் வரை கோரப்பட்டதால் இரு தரப்பிற்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டிய கட்டாயம் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது வியூகத்தை மாற்றியது. மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தனது கோரிக்கையை 35 தொகுதிகளாகக் குறைத்துக் கொண்ட நிலையில் திமு கழகம் கூடுதலாக மூன்று தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் இருபத்தொன்பது சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் என திமு கழகச் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.