நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?- திமுக மீது விஜய் அட்டாக்..!
Top Tamil News March 04, 2026 01:48 AM

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் சாலையில் சென்று பொதுமக்களை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளது. இதில், வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த வெட்டுக் காயமடைந்தனர். இந்த கொடூர கொலைச் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?. இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?. நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?. போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?

பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?. மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி என்று தெரிவித்துள்ளார்.
 


 


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.